(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, March 2, 2017

ராமநாதபுரத்தில் மார்ச் 4 ஆம் தேதி முதல் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறையின் சார்பில் முதல் முதலாக காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மார்ச் 4 ஆம் தேதி முதல் நடத்த உள்ளதாக எஸ்.பி. ந.மணிவண்ணன் தெரிவித்தார்.

ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் முறையினை புதன்கிழமை தொடக்கி வைத்த பின் மேலும் அவர் கூறியது: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஆள்கள் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது.

இத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் தேர்வாக வேண்டும் என்ற நோக்கில் மாவட்டக் காவல்துறையின் சார்பிலேயே இலவச பயிற்சி வகுப்பு நடத்த இருக்கிறோம். வரும் மார்ச் 4 ஆம் தேதி காலை 6 மணிக்கு சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோரை தேர்வு செய்ய உள்ளோம்.

இப்பயிற்சியின் போது நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், மார்பளவை விரிக்கும்போது எவ்வாறு விரித்துக் காட்டுவது போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படும். மேலும் மாதிரி எழுத்துத் தேர்வும் நடத்தி மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு அதற்கும் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது கையேடுகளும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. எனவே இந்த வாய்ப்பை ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.


ராமநாதபுரத்தில் கடந்த ஆண்டு 310 விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த ஆண்டு அதை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தலைக்கவசம் அவசியம் அணிய வலியுறுத்தல், விபத்து அடிக்கடி நடக்கும் இடங்களை கண்டறிந்து ஆய்வு செய்து அவ்விடங்களில் மேலும் விபத்துக்கள் நடக்காமல் தடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதற்கென ஒரு குழுவும் அமைக்கப்படவுள்ளது. விபத்துக்களை குறைக்க பொதுமக்களும் எஸ்.பி.க்கு நேரில் கடிதம், வரைபடங்கள் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவித்தால் சம்பந்தப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் பதிவாகும் முதல் தகவல் அறிக்கை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கும், காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இணையம் வாயிலாகவே கண்டறிந்து பதிவிறக்கமும் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களும் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும். இவை தவிர கைது உத்தரவுகள், பிணை முறி ஆவணங்கள், குற்ற இறுதி அறிக்கைகள் உள்பட அனைத்து ஆவணங்களும் இணையத்தின் மூலமாகவே பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றார்.


அப்போது ராமநாதபுரம் ஏ.எஸ்.பி.எஸ்.சர்வேஷ்ராஜ் உடன் இருந்தார்.

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment