(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, May 17, 2017

பாம்பன், தொண்டி, சக்கரக்கோட்டை ஆகிய இடங்களில் மதுபான கடைகளுக்கு எதிராக பொதுமக்கள் முற்றுகை!!

No comments :
பாம்பனில் இயங்கி வரும் மூன்று மதுபான கடைகளையும் அகற்ற வலியுறுத்தி பெண்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மீனவ மகளிர் அமைப்பின் சார்பில் பாம்பன் நகர் பேருந்து நிறுத்தத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்திற்கு மோட்சராக்கினி தலைமை வகித்தார். மீனவ மகளிர் அமைப்பு தலைவி இருதயமேரி, ஜெபமாலை முன்னிலை வகித்தனர்.

மாதர்சங்க பொருளாளர் மேரிடெய்சி, உலகம்மாள், மனோகரி, எமரென்சியா, நிர்மலா, முத்துநம்பு, உலகம்மாள், மரியசாந்தி உட்பட பலர் பேசினர். பாம்பன் வாழும் ஏழை மீனவ மக்களின் நலன் கருதியும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் பாம்பனில் இயங்கி வரும் மூன்று மதுபானக்கடைகளையும் அகற்றவும்,


ராமேஸ்வரம் தீவுப்பகுதியை மதுஇல்லாத பகுதியாக அறிவிக்க அரசும், மாவட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

இதுபோல் தொண்டி அருகே நம்புதாளையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயில் மற்றும் குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதை உடன் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து கலெக்டர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் மத்தியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் குடிமகன்களின் தொல்லை குடியிருப்பு பகுதி மக்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று காலை சுற்றுவட்டார கிராம மக்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கடையை அடைக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். திடீரென பெண்கள் கடையை உடைக்க முற்பட்டனர். இதனால் சிறிது நேரம் பதட்டம் ஏற்ப்பட்டது.

இதையடுத்து திருவாடானை டிஎஸ்பி விஜயகுமார், தாசில்தார் தாமஸ், டாஸ்மாக் மண்டல மேலாளர் வடமலை ஆகியோர் கிராமத்திற்கு ஒருவர் என அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு வாரத்தில் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதாக அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


டாஸ்மாக் மேலாளர் வடமலை கூறும்போது, பொதுமக்களுக்கு இடையூராக உள்ள இந்த கடையை ஒரு வாரத்தில் அகற்றிவிட முடிவு செய்துள்ளோம். மாற்று இடம் தேர்வு செய்து விட்டு உடன் கடையை அடைத்துவிடுவோம் என்றார்.

இது போல சக்கரக்கோட்டையிலும் மதுபானகடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment