(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, December 18, 2017

ராமநாதபுரத்தில் ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தின் சார்பில் வட்டியில்லா கடன்!!

No comments :
ராமநாதபுரத்தில் ஜன்சேவா கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தொழில் முனைவோருக்கு  வட்டியில்லாமல் தொழில் கடன் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்க தலைவர்  நஜ்முதீன், செயலாளர் காஜிஅலி, பொருளாளர் காதர்மீரான் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் அங்கீகாரத்துடன் இந்தியாவில் 12 மாநிலங்களில் 33 கிளைகளுடன் செயல்பட்டு வரும் ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் ராமநாதபுரத்தில் முகம்மது சதக் சென்டர் வளாகத்தில் தனது புதிய கிளை தொடங்கி வட்டியில்லா கடன் வழங்கி வருகிறது. இந்த கடன் சங்கத்தில் ஏதேனும் ஒரு அடையாள சான்றுடன் உறுப்பினராக சேர்பவர்களுக்கு அவர்களின் உத்தரவாதத்தின் அடிப்படையில் சேவை கடன் மற்றும் தொழில் கடன் வழங்கப்படுகிறது.  ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தில் வழங்கப்பட்ட கடன் தொகையில் 98 சதவீத கடன் தொகை முழுமையாக திருப்பி பெறப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பல்வேறு வைப்பு நிதி, சேமிப்பு திட்டங்களின் மூலம் ரூ.5 லட்சத்தில் தொடங்கி ரூ.1 கோடியே 10 லட்சம் வரை பண பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மருத்துவம், கல்வி முதலியவற்றிற்கு உடனடி கடன் உதவியும், தொழில்கடன் உள்ளிட்டவைகளுக்கு பயனாளி அளிக்கும் திட்ட அறிக்கையின் அடிப்படையிலும் கடன் வழங்கப்படுகிறது. 
 


வீட்டு உபயோக பொருட்களுக்கான கடன் ஒரு நபருக்கு ரூ.ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரையிலும், குழுக்கடன் ஒரு குழுவிற்கு ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. தொழில் கடன் மேம்பாட்டு பயிற்சி பெற்று அதனை நிறைவு செய்த குழுக்களுக்கு ரூ.10 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். தனிநபர் தொழில் கடன் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரத்தில் கிளை தொடங்கப்பட்டு கடந்த 6 மாதத்தில் 200 பேருக்கு ரூ.60 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.  கடன் வாங்கியவர்கள் தாங்கள் பெற்ற கடன் தொகையில் தொடங்கப்பட்ட தொழில் முறையாக நடத்த முடியாமல் போனால் அவர்களின் கடன் தொகையை இருக்கும் தொழில் பொருட்களை விற்பனை செய்து பங்கிட்டு கொள்ளும் வசதி உள்ளதால் பயனாளிகளை மேலும் கடனாளியாக்கும் அவல நிலை இந்த கூட்டுறவு சங்கத்தில் இருப்பதில்லை. எந்த ஒரு மதத்தினருக்கு மட்டுமல்லாமல்அனைத்து மதத்தினருக்கும் பாரபட்சமின்றி ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தொழில் முனைவோர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தங்களின் தொழில் வாய்ப்பினை பெருக்கி கொள்ளலாம். வட்டியில்லாமல் கடன் வழங்குவதால் இந்தியா முழவதிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் தற்போது ராமநாதபுரத்திலும் மக்களின் பேராதவை பெற்று வருகிறது.


செய்தி: தினபூமி

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment