(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, March 4, 2018

ராமநாதபுரத்தில் விரைவில் தகவல் தொழில் நுட்ப பூங்கா – அமைச்சர்!!

No comments :
  
ராமநாதபுரத்தில் 30 ஏக்கர் பரப்பளவில் விரைவில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மு.மணிகண்டன் பேசினார்.

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியன இணைந்து தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமை ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச் 3, 4) நடத்துகின்றன, சனிக்கிழமை தொடங்கிய விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார்.

இதில் பல்வேறு நிறுவனங்களின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் மு.மணிகண்டன் பேசியதாவது:

ராமநாதபுரத்தில் சட்டக் கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது.அதே போல் விரைவில் மருத்துவக் கல்லூரியும் கொண்டு வரப்படும். ராமநாதபுரத்தில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் தமிழக முதல்வரின் பரிசீலனையில் உள்ளது. இப்பூங்கா அமைந்தால் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.



இந்தியாவில் உள்ள அனைத்து மின்னணு நிறுவனங்களும் ஒன்று சேர்ந்துள்ள அமைப்பை தமிழகத்தில் உருவாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த அமைப்பு உருவானால் ஏராளமான தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்புகளும் உருவாகும். வரவிருக்கும் பட்ஜெட்டிலும் இதுதொடர்பான அறிவிப்பு வெளியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கூகுள் நிறுவனத்தின் மையத்தை தமிழகத்திலும் அமைக்குமாறு அதன் நிர்வாகிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். சுனாமி, புயல் போன்ற காலங்களில் மின்னணு சாதனங்கள் செயலிழந்து விட்டாலும் தகவல்களை பெறும் வகையிலான கூகுள் பலூன் ஒன்று தமிழகத்தில் பறக்க விடப்படவுள்ளது.  இந்த பலூனை இயக்கினால் சுமார் 20 கி.மீ. தூரம் வரை அனைத்து மின்னணு சாதனங்களும் செயல்படத் தொடங்கி விடும்.

இறால் பண்ணைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது.ராமேசுவரத்தில் பசுமை ராமேசுவரம் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதால் அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் அனைத்து இறால் பண்ணைகளையும் மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் ஆட்சியரும், கோட்டாட்சியரும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் என்றார்.

இந்நிகழ்ச்சிக்கு ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.குருநாதன், ராமநாதபுரம் கோட்டாட்சியர் ஆர்.சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலைவாய்ப்பு  அலுவலக உதவி இயக்குநர் அபுபக்கர் சித்திக் வரவேற்றார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment