(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, September 10, 2018

ராமநாதபுர மாவட்டத்தில் ஊரணி துார் வாருகின்ற அனுமதி பெற்று மணற் கொள்ளை, நிலத்தடி நீராதார பாதிப்பு!!

No comments :

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் மணல் கொள்ளையர்களால் நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் கண்டு கொள்ளாத அவல நிலை உள்ளது.

திருப்புல்லாணி பகுதியில் வானம் பார்த்த பூமியான இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக பிள்ளையார் கூட்டம், மதகு கூட்டம், கூத்தியார் கூட்டம், சக்கரை தீர்த்தம், பி.குட்டம்,செட்டிய ஊரணி, அய்யா ஊரணி ஆகிய ஊரணிகள் உள்ளது. மழை நேரங்களில் இதில் தேங்கும் தண்ணீர் மக்கள் பயன்பாட்டிற்கும், கால்நடைகளுக்கு குடி நீராகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.

பிள்ளையார் கூட்டம் ஊரணியில் துார் வார கீழக்கரை தாசில்தார் ராஜேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். ஊரணியின் உள் பகுதியில் 3 அடி மட்டுமே துார் வார வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறி மணல் கொள்ளையர்கள் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் மணல் எடுத்து வருகின்றனர். 15 அடி ஆழம் வரை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் இரவு, பகலாக தொடர்ந்து மணல் எடுத்து வருகின்றனர்.

(File photo)


விதி முறைகளை மீறி மண் எடுப்பது குறித்து அப்பகுதி மக்கள் தாசில்தார், கலெக்டர் அலுவலக மனு நீதிநாளில் புகார் மனு கொடுத்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். மணல் கொள்ளையர்கள் ஊரணியை துார் வாருகிறோம் என்ற பெயரில் மணல் கொள்ளையடித்து வருகின்றனர்.


தாசில்தார் ராஜேஸ்வரி கூறுகையில்,''ஊரணி துார் வாருவதற்கான அனுமதியை வழங்கினேன். 3 அடி ஆழத்திற்கு மேல்மணல் எடுப்பது தெரியாது. இது குறித்து ஊரணியை பார்வையிடுகிறேன்,'' என்றார்.

துார் வார உத்தரவிடுவதோடு அதிகாரிகள் நிறுத்தி கொள்கின்றனர். உரிய அளவு ஆழம் தோண்டப்படுகிறதா, விதி மீறல்கள் உள்ளதா, என்று கண்காணிப்பது இல்லை.

அதிகாரிகள் உத்தரவு கிடைத்தவுடன் மணல் கொள்ளையர்கள் தங்களது வேலையை தெளிவாக செய்கின்றனர். இது தெரியாதது போல் அதிகாரிகள் நடிக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment