(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Tuesday, April 2, 2019

கீழக்கரையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது, மேலும் 6 பேருக்கு வலைவீச்சு!!

No comments :
கீழக்கரையில் கடந்த 2 நாட்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள கட்டிடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை மர்ம நபர்கள் உடைத்து அங்குள்ள கடையில் திருடியுள்ளனர். இதேபோல அன்று இரவு இந்து பஜாரில் உள்ள தனியார் நகைக்கடையில் கடையை உடைத்து வெள்ளி பொருட்கள் உள்பட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.

மேலும் கிழக்கு நாடார் தெருவில் இருசக்கர வாகனங்களையும், அதே தெருவில் கடையை உடைத்து பொருட்களையும் திருடிச்சென்றுள்ளனர். இதேபோல பல இடங்களில் உள்ள கடைகளிலும் திருடியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் சவுந்தர்ராஜன்(வயது 56) கீழக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதனைதொடர்ந்து மர்ம நபர்களை போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பூருக்கு செல்வதற்காக கீழக்கரை பஸ் நிலையத்தில் நின்றிருந்த
கீழக்கரையை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக்வேலன் (20),
கிருஷ்ணாபுரம் செல்லமணி மகன் அஜித்குமார் (21),
தட்டான் தோப்பு தெரு குணசேகரன் மகன் விஜய் (19) ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இவர்களுக்கு இந்த தொடர் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 



அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், 5 வெள்ளி மோதிரங்கள், 2 வெள்ளி காப்புகள், 8 நவரத்தினக்கல் பெட்டிகள், 12 நவரத்தினக்கல் ஐம்பொன் பெட்டிகள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி: தினத்தந்தி



(செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்;
ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.in வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment