(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Saturday, June 20, 2015

எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் இளைஞர் சுடப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பாக காவலர் கைது!!

No comments :
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் கடந்த 2014 இல் இளைஞர் சுடப்பட்டு இறந்த சம்பவம் தொடர்பாக சார்பு-ஆய்வாளரை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 எஸ்.பி.பட்டினம் அம்ஜத் நகரில் இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வருபவர் சி. அருள்தாஸ்.

இவரிடம், அதே ஊரைச் சேர்ந்த முகம்மது சாலிபு என்பவர் தனது வாகனத்தை பழுதுநீக்கம் செய்யக் கொடுத்திருந்தார். அந்த வாகனத்தை அதே பகுதியைச் சேர்ந்த காட்டுவா ராவுத்தர் மகன் செய்யது முகம்மது, தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார். இதனால், அருள்தாஸýக்கும், செய்யது முகம்மதுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

 இதுகுறித்து, அருள்தாஸ் எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.  சார்பு-ஆய்வாளர் காளிதாஸ் விசாரணைக்காக செய்யது முகம்மதுவை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

 அப்போது, சார்பு-ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் செய்யது முகம்மது உயிரிழந்தார். தன்னைக் கத்தியால் குத்த வந்ததால் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதாக சார்பு-ஆய்வாளர் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் கடந்த 14.10.2014-இல் நடந்தது. இதனைத் தொடர்ந்து காளிதாஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

 இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர், 17.10.2014 இல் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.  கடந்த ஏப்ரலில் இதை கொலை வழக்காக மாற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணை நடத்தினர்.


 இந்நிலையில், ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் தங்கியிருந்த சார்பு-ஆய்வாளர் காளிதாஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வெள்ளிக்கிழமை கைது செய்து ராமநாதபுரம் 2 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அவரை ஜூலை 2 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி வேலுச்சாமி உத்தரவிட்டார். பின்னர் காளிதாஸ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தி: தினமணி


No comments :

Post a Comment