(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Monday, February 22, 2016

மிருதன் - தமிழ் திரை விமர்சனம்!!

No comments :
ஊட்டியில் தனது தங்கை அனிகா வுடன் வசிக்கிறார் போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெயம் ரவி. டாக்டர் லட்சுமி மேனனை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஊரில் வைரஸ் நோய்த் தொற்றுக்கு ஆளாகிறது ஒரு நாய். அது ஒருவரைக் கடிக்க, வெறிநாயைவிட மோசமாக மாறும் அவர் தன் குடும்பத்தினரைக் கடித்துக் குதறுகிறார். அவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகி, எதிர்ப்படும் அனைவரையும் கடிக்கின்றனர். கடிபட்ட அனைவரும் மனித மிருகங்களாக மாறுகிறார்கள். மனித மிருகங்கள் வேகமாகப் பெருக, ஊரே பீதியின் பிடியில் சிக்குகிறது.

லட்சுமி மேனனும் அவருடன் பணி யாற்றும் மருத்துவக் குழுவும் தடுப்பு மருந்தை உருவாக்க கோவைக்குச் செல்லவேண்டி இருக்கிறது. இவர் களைக் கோவைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்கிறார் ஜெயம் ரவி. திரும்பிய பக்கமெல்லாம் மிருக மனிதர்களின் தாக்குதல். ஜெயம் ரவி அவர்களை ஜெயித்தாரா?

தமிழின் முதல் ஸாம்பிவகைப் படம் என்று சொல்லப்பட்ட படம் இது. ஆனால் ஸாம்பிக்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை. ஸாம்பி என்றால் பிணம்போல உணர்ச்சியற்று நடமாடும் மனிதன் அல்லது மனிதனைப் போல நடமாடும் பிணம். இந்தப் படம் வைரஸ் தாக்குதலால் வெறிகொண்ட மிருகமாக மாறும் மனிதர்களைப் பற்றியது. அதையாவது ஒழுங்காகக் கையாண்டிருக்கிறார்களா என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றம்தான்.



மருந்து இல்லாத இந்த பயங்கரமான நோய்க்கு ஆளானவர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கும் காவல் துறை ஆணையர் அதன் பிறகு தன் காவல் படையினரைக் கூட்டிக்கொண்டு எங்கு போனார் என்று தெரியவில்லை. இத்தனை பெரிய அபாயத்தைக் கையாள அரசு என்ன செய்கிறது என்பதும் தெரியவில்லை. இருப்பதெல்லாம் ஆயிரக்கணக்கில் பெருகும் மிருக மனிதர்கள். அவர்களை எதிர்கொள்ள தனி ஒருவனாக ஜெயம் ரவி.
மிருக மனிதர்களுக்கு தண்ணீர் என்றால் ஒவ்வாமை என்பதை ஆரம் பத்திலேயே காட்டிவிடுகிறார்கள். தண் ணீரைக் கொண்டு அவர்களை முடக்கும் திட்டம் அரசுக்குத் தோன்றாதா என்ன?

மிருக மனிதர்களை எதிர்கொள்வதிலும் த்ரில் எதுவும் இல்லை. அனைவரும் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு பாய்கிறார்கள். ஜெயம் ரவி ஓயாமல் அவர்களை சுட்டுக்கொண்டும் அடித்துக் கொண்டும் இருக்கிறார்.

அரசியல்வாதியை சித்தரித்துள்ள விதம் அரதப் பழசு. தொடக்கத்தில் லட்சுமி மேனனிடம் ஜெயம் ரவி நடந்து கொள்ளும் விதத்துக்கு எந்தக் காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. முன்னாள் காதலிஎன்னும் பாட்டு தேவையில்லாமல் வந்து எரிச்சலூட்டுகிறது. பதின் வயதில் உள்ள தங்கை, அண்ணனுக்குப் பெண் பார்ப்பதற்காக திருமணத் தரகரைக் கூட்டிவரும் அபத்தமும் படத்தில் உண்டு.

தலைமை மருத்துவர் தொடர்பான சஸ்பென்ஸ், மரண பீதிக்கு நடுவே இழையோடும் காதல் கதை, அண்ணன் தங்கை பாசம் ஆகியவைதான் சிறிது ஆறுதலைத் தருகின்றன.

மிருக மனிதர்களின் ஒப்பனைகள், கிராஃபிக்ஸ் ஆகியவற்றின் தரம் மிகவும் சுமார். டி.இமானின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் பின்னணி இ(ம்)சையைத் தாங்க முடியவில்லை. எஸ்.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, படத் தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது.

ஜெயம் ரவி நன்றாகவே நடித் திருக்கிறார். குறிப்பாக கடைசிக் காட்சி களில் நன்கு உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருக்கிறார். சவால் இல்லாத வேடத்தில் லட்சுமி மேனன் கவனிக்க வைக்கிறார். குழந்தை அனிகாவின் நடிப்பு மனதில் நிற்கிறது.


விமர்சனம்: தி ஹிந்து

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் வலைதள FLIP KART / AMAZON / SNAP DEAL பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment