(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Thursday, June 21, 2018

ராமநாதபுர மாவட்டத்தில் சூரிய எரிசக்தி பூங்காக்கள் நிறுவ நிலங்களை குத்தகைக்கு வழங்கலாம்!!

No comments :


சூரிய எரிசக்தி பூங்காக்கள் நிறுவத் தேவையான இடங்களை வைத்திருப்போர் அதனை குத்தகைக்கு வழங்க விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் 500 மெகாவாட் அளவுக்கு ஒருங்கிணைந்த சூரிய எரிசக்தி பூங்காக்களை நிறுவ தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமைக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பூங்காக்கள் ஒவ்வொன்றும் 50 மெகாவாட் திறன் கொண்டதாக இருக்கும். அதற்கும் குறைவான திறன் கொண்ட பூங்காக்கள் அமைக்கவும் பரிசீலிக்கப்படும், சிறு, குறு விவசாய குழுக்கள், சுய உதவிக்குழுப் பெண்கள், ஊராட்சிகள், விவசாய சங்கங்கள் ஆகியன இதற்குத் தேவையான நிலங்களைக் குத்தகைக்கு வழங்கலாம்.



இவர்கள் தனியாகவோ அல்லது இணைந்தோ நிலத்தை வழங்குவதற்கான விருப்பக் கடிதத்தை வழங்கிட வேண்டும். சூரிய எரிசக்தி பூங்கா அமைக்க தங்கள் நிலத்தை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் நிலையான ஆண்டு வருவாய் பெற முடியும்.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தை தங்கள் வசம் வைத்துக்கொண்டு சூரிய எரிசக்தி பூங்கா அபிவிருத்தியாளர்களிடம் தங்களது பங்கைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தப் பூங்காக்கள் அமைவதன் மூலம் அந்தந்த வட்டாரங்களில் நிலவும் வறுமையை ஒழிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிக்க முடியும். திறன் உள்ள மற்றும் திறன் இல்லாதவர்களுக்கும் தற்காலிக மற்றும் நிரந்தர  வேலைவாய்ப்புகளை உருவாக்கிடலாம். தனியார் மற்றும் பொது பொருளாதார முதலீடுகளையும் ஈர்க்கலாம்.
அமையும் இடங்களில் உள்ள அடிப்படைக் கட்டமைப்புகளான சாலைவசதி,சுகாதாரம், மின்சார வசதி, தண்ணீர்வசதி மேம்பாடு, ஆற்றல் பாதுகாப்பு விரிவாக்கம் என்ற சமூக வளர்ச்சியையும் எட்ட முடியும்.

இத்திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் இது குறித்த விருப்பக் கருத்துக்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலும், அந்தந்த பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சி அலுவலகங்களில் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட எரிசக்தி மேம்பாட்டு முகமையின் உதவிப் பொறியாளர் தொலைபேசி எண் 7708064717 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


செய்தி: தினசரிகள்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment