(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Sunday, August 26, 2018

வைகை நீர் ராமநாதபுரம் வந்தடைவதில் சிக்கல்!?

No comments :


ராமநாதபுரம் மாவட்ட எல்லையாக உள்ள பார்த்திபனுார் வைகைஆற்றின் குறுக்கே மதகு அணையில் கருவேல மரங்கள், நாணல்கள் அடர்ந்துள்ளது. இத்துடன் வறண்டு வரும் நிலத்தடி நீரால் பரமக்குடிமக்கள் வைகை நீரை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
பார்த்திபனுார் மதகு அணை ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்தை மையமாக வைத்து,1975ல் பார்த்திபனுார் மதகு அணை 25 ஷட்டர்களுடன் கட்டப்பட்டது.

வைகையில் தண்ணீர் வரும் காலங்களில் வலதுபிரதான கால்வாய் வழியாக, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 43.2 கி.மீ., துாரம் 30 பிரிவு கால்வாய்கள் மூலம் 154 கண்மாய்களுக்கு நீர் செல்லும். இதன் மூலம் 33 ஆயிரத்து196 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

இடது பிரதான கால்வாய் மூலம் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்திற்கு,45 கி.மீ., துாரம் 28 பிரிவு கால்வாய்கள் மூலம் 87 கண்மாய்களுக்கு நீர் செல்லும். இதன் மூலம் 34 ஆயிரத்து 982 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்.



வெள்ளப்போக்கி கால்வாய்கள் மூலம், பரமக்குடி, கமுதி,முதுகுளத்துார் தாலுகாவிற்கும், பரளை ஆற்றின் மூலமும் 50 க்கும் மேற்பட்டகண்மாய்கள் நிரப்பப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் வானம் பார்த்த பூமியாக உள்ளது. கடந்த நான்குஆண்டுகளாக மழையின்றி நீர் நிலைகள் காய்ந்துள்ளன. தற்போதுவைகைஅணையில் நீர் மட்டம் 68 அடியாக உள்ளது.

பரமக்குடி குடிநீர் தேவைக்கு தண்ணீர் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் மக்கள் காத்திருக்கின்றனர். பரமக்குடியில் நிலத்தடி நீர் வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் 150 அடியிலும், மற்ற பகுதியில் 250 முதல் 300 அடியையும் தாண்டி அதல பாதளத்திற்கு சென்று விட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் 400 முதல் 500 அடிக்கும் மேல் ஆழ்குழாய் அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து மனஉளைச்சலுக்க ஆளாகியுள்ளனர்.

2017 டிச., 10 ல் பார்த்திபனுார் மதகுக்கு வந்த வைகை நீர் தொடர்ந்து பத்துநாட்கள் பரமக்குடி வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை அடைந்தது. அப்போது காட்டாற்று வெள்ளமென ஆற்றின் இரண்டு ஓரங்களில் மட்டும்தண்ணீர் சென்றதால் பரமக்குடியின் நிலத்தடி நீரில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

தற்போது மழை பொழிவின்றி உள்ளதால், வைகையில் தண்ணீர் திறக்கப்படும்சூழல் உள்ளது. இதனால் ஆற்றில் கட்டப்பட்டுள்ள கமுதக்குடி, தெளிச்சாத்தநல்லுார், குணப்பனேந்தல், வல்லம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான் பரமக்குடி, நயினார்கோவில், போகலுார் உள்ளிட்ட பகுதிகளில்நீர் மட்டம் உயர ஏதுவாகும். பரமக்குடி வியாபாரிகள் சங்கம், பல்வேறு அமைப்பினர், கட்சியினர், சமூக ஆர்வலர்கள், வைகை பாசன விவசாயிகள் என ராமநாதபுரம் மாவட்டத்திற்குதண்ணீர் வேண்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.



வைகை ஆறு தொடங்கி, வலது, இடது பிரதான கால்வாய்கள், பரளை ஆறு என பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அணைகள் தொடர்ந்து தண்ணீர் வராமல் உள்ளது. பொதுப்பணித்துறையினர் பராமரிக்காமல்விட்டுள்ளனர். ஆங்காங்கே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துள்ளதுடன், பிரிவு கால்வாய்க்கு தண்ணீர் செல்லும் வழியில் அடைப்புகள் உருவெடுத்துள்ளன. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா என்ற நிலையில், தண்ணீர் எதிர்த்து செல்ல முடியாமல் ஆங்காங்கே தடைபடும் சூழல் உள்ளது.


செய்தி: தினமலர்

(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)

No comments :

Post a Comment