(முகவை மாவட்டத்தின் முன்னணி இணைய இதழ்)

Wednesday, February 25, 2015

1,023 நபர்களுக்கு பணிநியமன ஆணை - மாவட்ட வேலை வாய்ப்பு முகாம்-ல்

No comments :
சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 1,023 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
முன்னதாக, சிவகங்கை பேருந்து நிலையம் அருகே செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சிக்கு, மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கண்காட்சியை திறந்துவைத்தார்.

அதையடுத்து, சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது இ-சேவை மையத்தை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
  தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம் இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட 1,023 நபர்களுக்கு நேரடி பணிநியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.             

பின்னர் அவர் பேசியது: அரசு பொது இ-சேவை மையங்கள், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. இம்மையங்களில் வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்பத்தில் முதல் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ்கள் உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்படுகின்றன.

வருங்காலத்தில் இம்மையங்கள் மூலம் அரசு துறைகளின் பல்வேறு சேவைகளை இணையம் மூலமாகவே பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன    என்றார்.

 நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, மாவட்ட வன அலுவலர் குருசாமி, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) குருநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் சிவதேவ்குமார், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ, கூட்டுறவு வங்கித் தலைவர் முருகானந்தம், ஆவின் பால்வளத் தலைவர் சண்முகம், வருவாய் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, மகளிர் திட்ட அலுவலர் சரோஜாதேவி, வட்டாட்சியர் கார்த்திகாயினி, புதுவாழ்வுத் திட்ட அலுவலர் அசோக்குமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

செய்தி: தினமணி


இது சம்பந்தமாக நம் தளத்தில் முன்னர் வெளியிடப்பட்ட செய்தி: http://www.muhavaimurasu.in/2015/02/blog-post_1.html

No comments :

Post a Comment